வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்: ட்ரம்ப் உறுதி

வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்: ட்ரம்ப் உறுதி
Updated on
1 min read

வெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் வெனிசுலா திண்டாடி வருகிறது. மதுரோவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா கடந்த மாதம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ட்ரம்ப் தலைமையிலான அரசை வெனிசுலா அதிபர் மதுரோ தீவிரவாதக் குழு என்று விமர்சித்தார்.

இந்த நிலையில் வெனிசுலாவில் நடக்கும் போராட்டங்களுக்கு ட்ரம்ப் ஆதரவு அளித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ''வெனிசுலா மக்கள் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்காகப் போராடுகிறார்கள். அவர்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.

நான் வெனிசுலா அதிபர் மதுரோவின் ஆட்சியில் உள்ள ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன். வறுமை, மரணம், பசி அனைத்துக்கும் முடிவு கட்டுங்கள். உங்கள் மக்களைச் செல்ல விடுங்கள். வெனிசுலா மக்கள் ஒன்றுசேர வேண்டிய நேரமிது'' என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in