

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இஸ்லாமிய விரோதியாக சித்தரிக்க அல்-காய்தா முயற்சி செய்வதாகவும், இதனை இந்திய அரசு விழிப்புடன் கையாள வேண்டும் என்று அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவில் பணியாற்றிய மூத்த ஆலோசகர் ப்ரூஸ் ரெய்டல் கூறும்போது, "அல்- காய்தா ஆசிய நாடுகளை குறிவைக்கும்படியாக வெளியிட்டுள்ள வீடியோவை எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். அந்த பயங்கரவாத அமைப்பை வேரோடு அழிக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
இந்தியாவில் தலைமை ஏற்றுள்ள புதிய அரசு இந்த நிலையை தற்போது உணர்ந்து செயல்பட வேண்டும். இவர்களின் அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் இந்திய அரசு, பயங்கரவாததிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியை, இஸ்லாமிய எதிரிகளாக சித்தரிக்க அந்த இயக்கம் முனைப்புடன் செயல்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தானை அடித்தளமாக கொண்டு, லஷ்கர்- இ- தொய்பாவுடன் அந்த இயக்கம் இணக்கமாக உள்ளது. அண்டை நாட்டில் தளம் அமைத்துள்ள இவர்கள், இந்தியாவுக்கு அபாயகரமான அச்சுறுத்தல் என்பதை நினைவில் வைத்து அவர்களுக்கு எதிராக சாதுர்யமாக செயல்பட வேண்டும்" என்றார்.
2008-ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா - அமெரிக்கா இடையேயான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் விதமான முயற்சிகளை இரு நாடுகளும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.