Last Updated : 18 Feb, 2019 10:38 AM

 

Published : 18 Feb 2019 10:38 AM
Last Updated : 18 Feb 2019 10:38 AM

பெண்களைக் கண்காணிக்க மொபைல் ஆப்: சவுதி அரேபியாவுக்கு குவியும் கண்டனம்

பெண்கள் எங்கே செல்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க செல்போன் செயலி ஒன்றை சவுதி அரேபியா உருவாக்கியுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுக்கும் சவுதி அரசு, தி ஆப்ஷர் (The Absher) என்ற இந்த அப்ளிகேஷன் பெண்கள், வயதானவர்கள், உடல் சவால் கொண்டவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களுக்குமே உதவியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றது.

இந்த அப்ளிகேஷன் அனைத்துவித ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட் போன்களில் கிடைக்கிறது. இதன்மூலம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றை புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம் என சவுதி அரசு கூறுகின்றது.

ஆனால், விமர்சகர்களோ இந்த அப்ளிகேஷன் மூலம் சவுதி ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்கள், பெண் பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள், வருகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆப்பிள் சிஇஓ டிம் குக், இந்த ஆப் குறித்து தனக்குத் தெரியாது என்றும் விரைவில் அது என்னவென்று பரிசோதிக்கவுள்ளதாகவும் அமெரிக்க தேசியப் பொது வானொலியில் கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரான் வைடன், ''அப்ஷர் ஆப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைத் தூண்டுவதால் ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் இந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனை தங்கள் இயங்குதளங்களில் இருந்து நீக்க வேண்டும்'' என்று வலியுறுத்துயுள்ளார்.

மொபைல் அப்ளிகேஷன்கள் மக்களின் சவுகரியத்துக்கானது என்ற அடிப்படை சேவை இலக்கையே இந்த ஆப் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சவுதியின் இந்தப் பிற்போக்குத்தனத்தை மட்டுமே அமெரிக்கா எதிர்க்கின்றது என்றும் இதில் அரசியல் ஏதுமில்லை என்றும் ரான் வைடன் தெளிவுபடுத்தியுள்ளார்.

பத்திரிகையாளர் ஜமால் படுகொலையால் விமர்சனத்துக்குள்ளாகி வரும் சவுதிக்கு இந்த அப்ளிகேஷன் சர்ச்சை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மான், சமூக பொருளாதார சீர்திருத்தங்களுக்காக அறியப்பட்டிருக்கும் சூழலில்தான் அங்கு மனித உரிமை ஆர்வலர்களும் பெண் உரிமை பிரச்சாரகர்களும் தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதோ? அவர்கள் வழக்கின் நிலை என்னவென்பதோ புரியாத புதிராகவே இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x