

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலைமையிலான அரசு தீவிரவாதக் குழுவைப் போன்றது என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறும்போது, ''கைப்பற்ற அவர்கள் நினைக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு தீவிரவாதக் குழு போன்று உள்ளது. இத்தீவிரவாதக் குழுவை மக்கள் தங்கள் கருத்தால் தோற்கடிப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் திண்டாடி வருகிறது. மதுரோவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமானம் அடிப்பைடையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா கடந்த மாதம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. வெனிசுலாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண்ணெய் வாங்கி வந்த அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததால் வெனிசுலா பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.