Last Updated : 15 Feb, 2019 01:00 PM

 

Published : 15 Feb 2019 01:00 PM
Last Updated : 15 Feb 2019 01:00 PM

புல்வாமா தாக்குதலில் எங்களை தொடர்புப்படுத்தாதீர்கள்: இந்தியா குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

புல்வாமா தாக்குதல் மிகப்பெரிய வருத்தத்துக்குரியது, எங்களை அதில் தொடர்புபடுத்தாதீர்கள். என்று இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

ஜம்முவில் இருந்து காஷ்மீருக்கு நேற்று மாலை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து அவந்திபோரா நெடுஞ்சாலையில் சென்றபோது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இந்தத் தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர், 38 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கமே காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டியது. தங்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், தீவிரவாதிகளின் புகலிடங்களை அழிக்கவும் வலியுறுத்தியது.

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் செயல்படும் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலின்படி தடை செய்ய சர்வதேச சமூகத்தினர் ஆதரவு தர வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்தது.

பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட மசூத் அசாருக்கு அனைத்து விதமான உரிமைகளையும் அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. மசூத் அசார் தன்னுடைய தீவிரவாத செயல்பாடுகளை தடையின்றி செய்யவும், இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், காத்துக்கொள்ளவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டு நீண்டநேரம் ஆகியும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பதில் இல்லை. நள்ளிரவில் பாகிஸ்தான் தூதரகத்தின் சார்பில் இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

எந்தவிதமான விசாரணையும் இன்றி புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம்சாட்ட வேண்டாம். புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதல் உண்மையில் ஆழ்ந்த வருத்தத்திற்குரியது. ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களை நாங்கள் தொடர்ந்து கண்டித்து வருகிறோம். இந்தத் தாக்குதல் எந்த வழியில் எந்த காரணத்துக்காக நடத்தப்பட்டு இருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்

அதேசமயம், எந்தவிதமான ஆதாரங்களும், விசாரணையும் இன்றி, புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசை தொடர்புப்படுத்தி இந்திய அரசு பேசுவதையும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுவதையும் கடுமையாக மறுக்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x