Published : 22 Feb 2019 04:38 PM
Last Updated : 22 Feb 2019 04:38 PM

வங்கதேசத்தையே உலுக்கிய தீ விபத்து: 10 முதல் 12 பேர் மீது போலீஸார் சந்தேகம்

வங்கதேசத்தையே உலுக்கிய தீ விபத்தில் 10 முதல் 12 பேர் மீது சந்தேகம் உள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கதேச தலை நகர் டாக்காவின் பழைய தாக்காவில் உள்ள சவுக்பஜார் பகுதியில் ஒரு மசூதிக்குப் பின்புறம் ஹாஜி வாஹத் 4 அடுக்கு கொண்ட  குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 3-வது மற்றும் 4-வது மாடியில் உள்ள பல வீடுகளை வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில்  புதன்கிழமை இரவு கேஸ் கசிவு ஏற்பட்டு தீ உண்டானது.

அதைத் தொடர்ந்து அந்த தீ  மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும், பிளாஸ்டிக் பொருட்கள், வேதிப்பொருட்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்கிற்கும் பரவியது.

 

இதில் பிளாஸ்டிக் பொருட்கள், வேதிப்பொருட்கள் இருந்த வீட்டில் தீ பரவியவுடன் தீ  கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.  இதில் அந்தக் குடியருப்பில் வசித்து வந்த மக்கள் தீயில் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வங்க தேசம் முழுவதும் இந்த தீ விபத்து பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் இந்தத் தீ விபத்து தொடர்பாக 10 முதல் 12 பேர் மீது சந்தேகம் உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும்  டாக்கா துணை காவல் ஆணையர் இம்ராஹிம் கான் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் இறந்தவர்களின் உடலை கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x