Published : 14 Feb 2019 10:59 AM
Last Updated : 14 Feb 2019 10:59 AM

ஏமன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: அமெரிக்கா தீர்மானம்

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்தது. ஏமனிலிருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற அவையில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரு  நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏமனில் போரை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து கலிபோர்னியா ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பர்பாரா லீ கூறும்போது, ''நாங்கள் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளவர்களுக்கு உதவி இருக்கிறோம். ஏமன் போரில் அமெரிக்கப் படைகள் பங்கேற்று இருப்பது அவமானகரமானதுதான்'' என்றார்.

மேலும், இராக், சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியே கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் ஏமனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது குறித்து அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x