Published : 20 Feb 2019 01:46 PM
Last Updated : 20 Feb 2019 01:46 PM
பாகிஸ்தானில் இந்தியப் பாடலுக்கு நடனமாடிய தனியார் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புல்வாமாவில் கடந்த பிப்.14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் 'மாமா பேபி கேர் கேம்பிரிட்ஸ்' தனியார் பள்ளி உள்ளது. இதில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் சில குழந்தைகள் இந்தியப் பாடலுக்கு (Phir Bhi Dil Hai Hindustani) நடனமாடினர். நடனத்தின்போது பின்னணியில் இந்தியக் கொடி அசைந்தது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு பாகிஸ்தானில் கடுமையான விமர்சனம் எழுந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு பாக். கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில், ''கல்வி நிறுவனங்களில் தேசத்தின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் அத்தகைய பொருளைக் (இந்தியக் கொடி) காண்பிப்பது தவறு. இதை எக்காரணத்தைக் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாது'' என்று கூறப்பட்டிருந்தது.
வீடியோ
இந்நிலையில், இதுகுறித்து கல்வித்துறை இயக்குநரகத்துக்குப் பள்ளி முதல்வர் பதிலளிக்கவில்லை என்றும் நேரில் ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தியக் கலாச்சாரத்தை ஊக்குவித்ததாகக் கூறி, பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT