

இராக்கில் ஆதிக்கம் செலுத்த முயலும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்புக்கு எதிரான தங்களது நாட்டின் போர் செயல்திட்ட உத்தியை அதிபர் ஒபாமா அறிவிக்கின்றார்.
இது குறித்து அதிபர் ஒபாமா என்.பி.சி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கு எதிரான அறிவிப்பை நான் புதன்கிழமை அன்று வெளியிட உள்ளேன். ஆனால் இந்த அறிவிப்பில் அவர்களுக்கு எதிரான அமெரிக்க தரைப்படைகளின் தாக்குதல் தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறாது.
இவர்களுக்கு எதிரான சண்டையை இராக் போர் என்று கூறிவிட முடியாது. இது கடந்த 7 வருடங்களாக அமெரிக்கா, தீவிரவாதத்திற்கு எதிராக நடத்திவரும் நடவடிக்கை என்றே இதனை கூற வேண்டும்.
இராக்கில் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மேற்கொண்ட முதற்கட்ட நடவடிக்கைகளிலிருந்து உளவுத்துறை செயல்பாடுகள், அங்குள்ள வளங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட வழிமுறைகள், முக்கிய உள்கட்டமைப்புகள் அதிகம் உள்ள எர்பில், மொசூல் அணை உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டது குறித்து விவரிக்கப்படும்" என்றார்.
மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸுக்கு எதிரான முக்கிய இரண்டாம் கட்ட அடியை அமெரிக்கா எடுத்து வைப்பதால், இந்த அறிவிப்புக்கு முன்னதாக அமெரிக்க செனட் உறுப்பினர்களின் ஆதரவை நாளை (செவ்வாய்கிழமை) தான் பெற உள்ளதாக ஒபாமா தெரிவித்தார்.