

பிலிப்பைன்ஸில் உள்ள தேவலாயத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் தரப்பில், ''பிலிப்பைன்ஸின் தென்பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக தேவலாயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 20 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும் இந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு 4 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிலிப்பைன்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பினால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பிலிபைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பிலிப்பைன்ஸில் தொடர்ந்து தேவலாயங்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.