

ஏமனில் அல் கொய்தா தீவிரவாதிகளின் தளபதி ஒருவர் அமெரிக்கா நடத்திய வான்ழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ‘‘2000 ஆம் ஆண்டு ஏமன் துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் மீது அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 17 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு காரணமான அல் கொய்தா தளபதி ஜமில் அகமத் முகமத் சமீபத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
அமெரிக்க ராணுவம் இந்தத் தாக்குதலை ஜனவரி 1 -ம் தேதி நடத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் ஜமில் கொல்லப்பட்டதை அமெரிக்கா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ஜமில் 2003 ஆம் ஆண்டுமுதல் அமெரிக்காவின் புலனாய்வு துறையினரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பின் சிறையிலிருந்து தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.