Last Updated : 24 Sep, 2014 05:20 PM

 

Published : 24 Sep 2014 05:20 PM
Last Updated : 24 Sep 2014 05:20 PM

ஐ.எஸ்.ஸுக்கு எதிராக மோடியிடம் ஒபாமா ஆதரவு கோர வாய்ப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் வாஷிங்டன் பயணத்தின்போது, ஐ.எஸ்-ஸுக்கு எதிராக இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிரியா மற்றும் இராக்கில் போரிட்டு வரும் ஐ.எஸ். கிளர்ச்சி அமைப்பிற்கு எதிராக, சர்வதேச நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்று வரும் நிலையில், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் ஒபாமா இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுவரை ஐ.எஸ்-ஸுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. 20-க்கும் அதிகமான நாடுகள், தாக்குதலில் அமெரிக்காவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இது தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் கோருவார் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர்கள் கூறும்போது, "மோடி-ஒபாமா இடையேயான சந்திப்பின் போது ஐ.எஸ். தொடர்பான விஷயங்கள் குறித்து பேசப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் இருவரும் பேச வாய்ப்பு உள்ளது.

கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்துக்கும் பங்கு உண்டு. இதைத் தவிர இந்த சந்திப்பில் ஏற்பட இருக்கும் விவாதங்கள் குறித்து விவரிக்க முடியாது" என்று கூறப்பட்டது.

எனினும் மோடி-ஒபாமா உடனான சந்திப்பின்போது, இந்தியாவிடமிருந்து ராணுவ ரீதியிலான உதவியை அதிபர் ஒபாமா கோர மாட்டார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரியாவில், அரபு நாடுகளின் ஆதரவோடு கடந்த ஒரு வார காலமாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x