Published : 11 Sep 2014 05:09 PM
Last Updated : 11 Sep 2014 05:09 PM

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச விசாரணையை அனுமதிப்போமா?- ராஜபக்சே சிறப்புப் பேட்டி

இலங்கை மீதான போர்க்குற்ற புகார்களை விசாரிக்க சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய ராஜபக்சே, 'நாளை காஷ்மீர் விவகாரத்திலும் சர்வதேச விசாரணை என்றால் அனுமதிப்போமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணை

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், "எங்கள் அரசு உள்நாட்டு விசாரணைகளை நடத்தி வருகிறது. அதனை சர்வதேசமயமாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதனை அனுமதித்தால் ஐ.நா. மனித உரிமை ஆணையம் அடுத்த முறை காஷ்மீரில் சர்வதேச விசாரணை தேவை என்று கோரும், அதை அனுமதிப்போமா? இலங்கையாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் வெளியிலிருந்து விசாரணையை அனுமதிக்க முடியாது" என்றார்.

பாலச்சந்திரன் மரணம்

போர்க் காலத்தில் மர்மமான முறையில் 'காணாமல் போன' 20,000 பேரை பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது என்ற அவர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபகாரனின் மகன் பாலச்சந்திரனின் மர்மமான மரணத்துக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதிலும் இன்னும் முடிவு காணப்படவில்லை என்று தெரிவித்தார்.

2009-ஆம் ஆண்டு மே மாதம் 'தி இந்து' ஆங்கில நாளிதழில் வெளியான புகைப்படங்களில் பாலச்சந்திரனைச் சுற்றி ராணுவச் சீருடை அணிந்தவர்கள் நின்றிருந்தனர். இது காவலில் நடைபெற்ற கொலை என்பதை அறிவுறுத்தியது.

இது பற்றி ராஜபக்சே கூறும்போது, "நாங்கள் அதனை இன்னும் விசாரித்து வருகின்றோம். நான் அதனை நம்பவில்லை (அதாவது ராணுவம் பாலச்சந்திரனை கொலை செய்தது என்பதை) ஆனால், அது உண்மையா என்பதை நான் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் விசாரணை நடந்து வருகிறது. போரில் இருதரப்பினரும் சண்டையிடும் போது, யார் யாரைச் சுட்டார்கள் என்பதை எப்படிக் கூற முடியும்?" என்றார் ராஜபக்சே.

13-வது சட்டத் திருத்தம்

மேலும், இலங்கை வடமாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன 13-ஆம் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழ் தேசியக் கூட்டனியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் ராஜபக்சே அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர் மீது குற்றச்சாட்டு

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்திய மீனவர்கள் ஒன்றிரெண்டு படகுகளில் வருவதில்லை, நூற்றுக்கணக்கான படகுகளில் இலங்கைக் கடற்பகுதிக்குள் வருகின்றனர். மேலும், ஆழ்கடல் மீன்களை பெருமளவு சிக்கவைக்கும் ராட்சத வலைகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இலங்கை மீன் வளம் அழிக்கப்படுகிறது, மேலும் சுற்றுச்சூழல் நாசம் செய்யப்படுகிறது.

நூற்றுக்கணக்கான படகுகள் இலங்கை கடற்பகுதியில் நுழைகின்றன. இது எங்களுக்குக் கெடுதல், சுற்றுச்சூழலுக்குக் கெடுதல், இந்தியாவுக்கும் இது நல்லதல்ல. ஆழ்கடலில் ராட்சத வலை கொண்டு மீன்களைப் பிடிப்பதுதான் பிரச்சினையே தவிர, சர்வதேச கடல் எல்லையை அவர்கள் கடந்து வருவதல்ல" என்றார் ராஜபக்சே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x