Published : 08 Dec 2018 05:24 PM
Last Updated : 08 Dec 2018 05:24 PM

அமெரிக்கா பொருளாதார தீவிரவாதத்தை நிகழ்த்துகிறது: ஈரான்

அமெரிக்கா எங்கள் மீது தொடுப்பது பொருளாதார தீவிரவாதம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் ஹசன் ரவ்ஹானி பேசும்போது,  ” எங்கள் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கும்  நாட்டை எச்சரிக்கிறேன். அமெரிக்கா எங்கள் மீது விதிக்கும் இந்தப் பொருளாதாரத் தடைகளால் போதைப் பொருட்கள் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான எங்களது திறன் பாதிப்படைகிறது. இந்தத் தடைகள் ஈரானை பலவீனப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கும்தான் ஆபத்து. அமெரிக்கா பொருளாதார தீவிரவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

எங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா நிறுத்தினால், வேறு எந்த கல்ஃப் நாடுகளும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாது  என்று ஈரான் சில நாட்களுக்கு முன்னர்  மிரட்டல் விடுத்திருந்தது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x