Last Updated : 23 Dec, 2018 02:10 PM

 

Published : 23 Dec 2018 02:10 PM
Last Updated : 23 Dec 2018 02:10 PM

இந்தோனேசியா சுனாமிக்கு பலி 168 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே நேற்று ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சுனாமி அலையில் சிக்கி காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 700-க்கும் மேற்பட்டோராக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், ஹோட்டல்கள் சேதமடைந்துள்ளன.

இந்திய பெருக்கடலில் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் கிராகாகட்டு எரிமலையில் உள்ள “சைல்டு” எனும் சிறிய எரிமலை நேற்று இரவு 9 மணிக்கு(உள்ளூர்நேரப்படி) வெடித்துச் சிதறி, எரிமலைக்குழம்புகளை வெளியேற்றத் தொடங்கியது.

அனாக் கிராகட்டு பகுதியில் உள்ள சைல்டு எரிமலை வெடித்ததன் காரணமாகவும், கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சுமத்ரா, ஜாவா கடற்கரைப்பகுதியில் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதிலும் நேற்று பவுர்ணமி என்பதால், கடல் ஆவேசமாகக் காணப்பட்டது. அனைத்து ஒன்று சேர்ந்த நிகழ்வால் சுனாமி அலைகள் உருவாகின.

சுனாமி அலைகள் தாக்கியதில் ஜாவாவில் உள்ள பண்டேக்லாங், பான்டேன், சுமத்ரா தீவுகளில் உள்ள பகுதிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

வரும் 25-ம் தேதிவரை யாரும் கடல் அருகே செல்ல வேண்டாம். கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், மீண்டும் சுனாமி வர வாய்ப்புள்ளது என்று மக்களுக்கு இந்தோனேசிய வானிலை மற்றும் நிலவியல் அதிகாரி ரஹ்மத் டிரியனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தேசியபேரிடர் மேலாண்மை அதிகாரி டோப்போ புரோ நுக்ரஹோ கூறுகையில் “ சுனாமியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது, 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், 30 பேரைக் காணவில்லை,பல்வேறு இடங்களுக்கு மீட்புப்படையினர் செல்ல முடியவில்லை என்பதால்,பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சுகிறோம்” என்று இந்தோனேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் வீடுகளும்,மரங்களும் சாய்ந்து கிடப்பதால், மீட்புப்படையினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பென்டேகிலாங் நகரின் பேரிடர் மேலாண்மை அதிகாரி பென்டன் பெர்மனா கூறுகையில், பான்டன் பகுதியில் உள்ள டன்ஜங் லெசங் பகுதி, ஜாவாவின் மேற்கு கடற்கரைப்பகுதி ஆகியவை சுனாமியால் பலத்த சேதமடைந்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாட நியூசிலாந்து,ஆஸ்திரேலியா நாட்டு சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் இந்த ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு வந்துள்ளனர். அவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை என்று, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ லும்பங் மாநிலத்தில் ஏற்பட்ட சுனாமியால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள், நம்பிக்கையுடன், பொறுமையுடன் இருங்கள், விரைந்து மீட்புப்பணிகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சுனாமி ஆய்வு மையத்தின் அதிகாரி கீகர் பிராஸ்டயா கூறுகையில், “ வழக்கமாக சுனாமி அலைகள் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேல் எழும்பாது. அது நிலஅதிர்வின் தன்மையைப் பொருத்துதான் இருக்கும். ஆனால், இப்போது, எரிமலை வெடித்துச் சிதறியதால், கடலுக்கு அடியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தண்ணீரின் அளவு திடீரென அதிகரித்து, சுனாமி அலையாக வந்துள்ளது. மக்கள் கடற்கரை பரப்புக்கு அருகே வீடுகளைக் கட்டுவதும், குடியிருப்பதும்தான் உயிர்ப்பலி அதிகரிக்கக் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x