

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கண்டன தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை கொண்டு வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க ஊடகங்கள், ”அமெரிக்காவில் வியாழக்கிழமை கூடிய செனட் சபையில் துருக்கியில் சவுதி தூதரக அலுவலகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜாமலின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஓட்டு பதிவு நடத்தி கண்டன தீர்மானத்தை கொண்டு வந்தனர்.மேலும் இந்த நிகழ்வில் ஜமாலின் கொலைக்கு காரணமான சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராகவும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, சவுதி அரசையும் அதன் இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்தவர் பத்திரிகையாளர் ஜமால். இவர் கடந்த அக்.2-ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களைப் பெறச் சென்றவர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.
இவருக்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜமால் இறந்ததாக சவுதி கூறிவந்தது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலை, என்றும் இக்கொலையில் இளவசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதாகவும் கூறி ஆதாரங்களை வெளியிட்டதுடன் குற்றவாளிகளைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு துருக்கி குற்றம் சாட்டியது.
ஆனால் சவுதி இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. இந்தக் கொலை வழக்கில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று சவுதி கூறியது.
இந்நிலையில் ஜமால் கொலை வழக்கில் சவுதியால் கைது செய்யப்பட்டுள்ள அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க அந்நாடு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.