

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா,ஜாவீ தீவுப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் இன்னமும் முடிவடையாத நிலையில் கடும் துயரத்துக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.
இந்திய பெருக்கடலில் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் கிராகாகட்டு எரிமலை 305 மீட்டர் உயரம் கொண்டது. இந்த எரிமலையில் உள்ள “சைல்டு” எனும் சிறிய எரிமலை வெடித்துச் சிதறி, எரிமலைக்குழம்புகளை வெளியேற்றத் தொடங்கியது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து குமுறிக்கொண்டே இருந்த எரிமலை தற்போது வெடித்துள்ளது.
அனாக் கிராகட்டு பகுதியில் உள்ள சைல்டு எரிமலை வெடித்ததன் காரணமாகவும், கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சுமத்ரா, ஜாவா கடற்கரைப்பகுதியில் சுனாமி அலைகள் ஏற்பட்டன.
இந்த சுனாமி அலை தாக்கியதால், கரிட்டா கடற்கரைப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 429 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரைக் இன்னமும் காணவில்லை, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் அரசு அலுவலகங்களில்பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் இன்னமும் நிறைவடையாததால் மக்கள் தவித்து வருகின்றனர்.