Published : 20 Aug 2014 05:43 PM
Last Updated : 20 Aug 2014 05:43 PM

நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் தீவிரம்: பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகும் வரை, நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களையும் முற்றுகையிட போராட்டக்காரர்களுக்கு, மதத் தலைவரும், அரசியல்வாதியுமான தாஹிர் காத்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

2013-ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகவும், அதனால் நவாஸ் ஷெரீபின் வெற்றி செல்லாது என்பதால் அவர், தனது பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் தாஹிர் உல் காத்ரி வலியுறுத்தினார்.

மேலும் ஷெரீபின் ஆட்சியில் லஞ்ச ஊழல் பெருத்துவிட்டதாகவும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் தாஹிர் காத்ரி குற்றம்சாட்டினார். இதற்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹிரீக்-இ- இன்சாப் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. இதனை அடுத்து அரசுக்கு எதிரான இரண்டு கட்சிகளின் போராட்டமும் பாகிஸ்தான் வலுத்தது.

பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ஆம் தேதியன்று, அரசுக்கு எதிராக மாபெரும் பேரணியை இணைந்து இரு எதிர்க்கட்சிகளும் நடத்தின.

இதில், தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி 350 கி.மீட்டர் தூர பேரணியை தாஹிர் காத்ரி கட்சி மேற்கொண்டது. அதில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இம்ரான்கானும் 1 லட்சம் தொண்டர்களை திரட்டி தலைநகரில் பேரணியை தொடங்கினார். சுதந்திர தினத்தன்று அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட மாபெரும் பேரணி, பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு நெருக்கடி ஏற்படுத்தியது.

அரசுக்கு எதிரான இந்த பேரணி கடந்த ஒரு வார காலமாக நீடித்துவருகிறது. எதிர்க்கட்சியினர் போராட்டத்தை தலைநகர் இஸ்லாமாபாதில் நடத்த அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசு, நாடாளுமன்ற கட்டடிம் மற்று அரசு அலுவலகங்கள் உள்ள 'ரெட் ஜோன்' என்றழைக்கப்படும் பகுதிக்குள் நுழையக்கூடாது என நிபந்தனை விதித்து இருந்தது.

போராட்டக்காரர்கள் 'ரெட் ஜோன்' பகுதிக்குள் நுழையாமல் பாதுகாக்க, அந்த பகுதியைச் சுற்று தடுப்பு முள்வேலிகளும், கப்பல் கன்டெய்னர்கள் வைக்கப்பட்டன.

ஆனால் இதனைத் தாண்டி செல்ல, இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் இணைந்து லட்சக்கணக்கோனோர் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தை குறி வைத்து திரண்டதால் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது. அவர்களுக்கு நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இம்ரான்கானும், மதகுரு தாஹிர் உல் காத்ரியும், போராட்டக்காரர்கள் நடுவே நின்று உரை நிகழ்த்தி வருகின்றனர். இதனால் நவாஸ் ஷெரீப் அரசுக்கு அங்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x