Last Updated : 24 Nov, 2018 10:17 AM

 

Published : 24 Nov 2018 10:17 AM
Last Updated : 24 Nov 2018 10:17 AM

தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு சீனத் தூதரக அதிகாரிகளைக் காத்த பாகிஸ்தானின் துணிச்சல் பெண் எஸ்.பி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் துணிச்சலுடன் சண்டையிட்டு, சீனத் தூதரக அதிகாரிகள் பலரை பெண் எஸ்.பி. ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீன தூதரகத்தின் மீது நேற்று தீவிரவாதிகள் 3 பேர் துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினார்கள். அந்தத் தூதரகத்துக்கு பெண்.எஸ்பி. சுஹாய் அஜிஸ் தல்பூர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தீவிரவாதிகள் தாக்கத் தொடங்கியுடன் பெண் எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர் தலைமையிலான படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தினார். இருதரப்புக்கும் இடையே நடந்த தீவிரமான துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்தத் தீவிரவாதிகள் 3 பேரும் பலூச் கிளர்ச்சிப்படை எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டுகள், உணவுப்பொட்டலங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினார்கள்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியவுடன் அவர்களுடன் சண்டையிட்டு அவர்களை சுட்டுக்கொலை செய்த பெண் எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக் குவியத்தொடங்கி இருக்கிறது.

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள தாண்டோ முகமது கான் மாவட்டம், தல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர். மிகவும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரான எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர், சிறுவயதில் வறுமையின் காரணமாக உறவினர்களால் ஒதுக்கப்பட்டுள்ளார்

அதன்பின் கடின சூழலில் வளர்ந்து, பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்து, கடந்த 2013-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி போலீஸில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

பெண் எஸ்.பி.சுஹார் அஜிஸ் தல்பூர் நிருபர்களிடம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து கூறியதாவது:

தீவிரவாதிகள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடனும், உணவுகள், மருந்துகள் ஆகியவற்றுடன் இருந்ததைப் பார்க்கையில் அவர்கள் சீனத் தூதரகத்தை கைப்பற்றும் திட்டத்தோடு வந்திருக்கக்கூடும். ஆனால், அவர்கள் தூதரகத்தின் வாயிலை நெருங்கியவுடன் போலீஸார் சுதாரித்துக்கொண்டு தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டனர். அனைவரும் சேர்ந்து நடத்திய தாக்குதலை தீவிரவாதிகளால் சமாளிக்க முடியவில்லை. இருந்தாலும் எங்கள் தரப்பில் இரு போலீஸார் கொல்லப்பட்டனர்.

என்னைச் சிறுவயதில் என் பெற்றோர் பள்ளியில்சேர்க்கும்போது உறவினர்கள் எல்லாம், பெண்களுக்கு எதற்கு படிப்பு என்று கிண்டல் செய்தனர். அதன்பின் சொந்த கிராமத்தில் இருந்து புறப்பட்டு, வேறு நகரத்துக்குக் குடிபெயர்ந்தோம்.

என்னுடைய தந்தை அஜிஸ் தல்பூர், அரசியல்வாதியாகவும், எழுத்தாளராகவும் இருந்தார். எனக்கு மதரீதியான கல்வியைத் தான் கொடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தியபோது, என் தந்தைதான் என்னை வெளியிடங்களுக்குச் சென்று படிக்க வைத்தார்.

பள்ளிப்படிப்பை முடித்து, சிந்து மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ஜுபைதா மகளிர் கல்லூரியில் பி.காம் முடித்தேன். நான் பட்டயக்கணக்காளராக வர வேண்டும் என்று குடும்பத்தினர் விரும்பினார்கள்.

ஆனால், சமூகத்தில் மதிப்புள்ள பணியைச் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதனால், கடினமாகப் படித்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். எனக்குச் சிறுவயதில் இருந்தே இலக்கியம், வரலாற ுபாடத்தில் அதிக ஆர்வம் அதனால், அதே தேர்வு செய்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி போலீஸில் சேர்ந்தேன்.

இவ்வாறு எஸ்.பி. சுஹார் அஜிஸ் தல்பூர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x