Published : 23 Aug 2014 12:00 AM
Last Updated : 23 Aug 2014 12:00 AM
ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ஹக்கானி அமைப்பின் 6 முக்கிய கமாண்டர்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ.180 கோடி அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டுவரும் ஹக்கானி தீவிரவாத குழுவினர், ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அங்குள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் இவர்களுக்கு தொடர்பு உண்டு.
இந்நிலையில் அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.60 கோடி அளிக்கப்படும். அந்த இயக்கத்தின் முக்கிய கமாண்டர்கள் அஜீஸ் ஹக்கானி, கலில் அல்-ரஹ்மான் ஹக்கானி, யாக்யா ஹக்கானி, அப்துல் ரசூப் ஜாகீர் ஆகியோர் குறித்து தகவல் அளித்தால் தலா ரூ.30 கோடி அளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
சிராஜுதீன் குறித்து தகவல் அளித்தால் ரூ.30 கோடி அளிக்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது, இப்போது அந்த தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பை அமெரிக்காவும், ஐ.நா.வும் 2012-ம் ஆண்டு தீவிரவாதக் குழுவாக அறிவித்தன.ஹக்கானி குழுவின் நிறுவனர் ஜலாலுதீன் ஹக்கானியின் மகனான சிராஜுதீன் ஹக்கானி இப்போது அமைப்பின் தலைவராக உள்ளார்.
2008-ம் ஆண்டு காபூலில் ஹோட்டல் ஒன்றில் தாக்குதல் நடத்தி 5 அமெரிக்கர்கள் உள்பட பலரை கொன்றது உள்பட பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் சிராஜுதீன் ஈடுபட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT