

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 30 பேர் உயிரிழந்தனர்.
கைபர் பக்துன்கவா மாகாணத்தின், ஓரக்சாய் மாவட்டம், கலயாஎன்ற இடத்தில் ஷியா முஸ்லிம்களின் ‘இமாம்பர்கா’ என்ற வழிபாட்டுத் தலம் உள்ளது. இதன் அருகே நேற்று வாராந்திர வெள்ளிக்கிழமை சந்தை கூடியதால், ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.
இந்நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மையின ஷியா முஸ்லிம்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலைத் தொடர்ந்து மாகாண முதல்வர் மெகமூத் கான் கூறும்போது, “இங்கு அமைதி நிலவுவதை எங்கள் எதிரிகள் விரும்பவில்லை” என்றார். பாகிஸ்தான் அரசின் நேரடிநிர்வாகத்தில் இருந்து வந்த ஓரக்சாய் மாவட்டம், அண்மையில் கைபர் பக்துன்கவா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.