Published : 12 Nov 2018 05:19 PM
Last Updated : 12 Nov 2018 05:19 PM

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள் மனுத்தாக்கல்

நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்ததை எதிர்த்து இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர் ஒருவர் சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு அதிபராகப் பதவி ஏற்றார் சிறிசேனா. இதையடுத்து, அதிபர் சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன.

3 ஆண்டுகள் சென்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென வாபஸ் பெற்ற சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார். சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தததால் இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்தார். அதன்பின், ராஜபக்சேயுடன் (இலங்கை மக்கள் முன்னணி) கூட்டணி அமைத்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இதனால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.பெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்று விக்ரமசிங்கே எதிர்ப்புத் தெரிவித்தார்.

சபாநாயகர் ஜெயசூர்யாவும் ராஜபக்சே சட்டப்பூர்வ பிரதமர் இல்லை என்று அறிவித்தார். இதனால் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் அதிபர் சிறிசேனா முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்ட அதிபர் சிறிசேனா, வரும் 14-ம் தேதி கூடும் என்று அறிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். திடீர் திருப்பமாக, மகிந்த ராஜபக்சே, நேற்று சிறிசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து வெளியேறி இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்தார். அவருடன் முன்னாள் எம்.பி. 50 பேரும் கட்சி மாறியுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி சார்பில் தேர்தலில் நின்று வென்றவர்கள்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்ததை எதிர்த்து இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர் ஒருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் ஆணைய உறுப்பினர் ரத்னஜீவன் கூலேயும் தனியாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் அனைத்தும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x