Published : 12 Nov 2018 12:47 PM
Last Updated : 12 Nov 2018 12:47 PM
ஸ்ட்ராபெரி பழத்தில் ஊசியை மறைத்து வைத்திருந்ததாக 50 வயதுப் பெண்ணை ஆஸ்திரேலியக் காவல்துறை கைது செய்துள்ளது.
'ஸ்ட்ராபெரி பழத்தில்' ஊசி
ஸ்ட்ராபெரி பழங்களை சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கிச் சென்று சாப்பிட்டவர்கள் தொண்டையிலும், வயிற்றிலும் ஊசி சிக்கி அவதிப்பட்டனர். மேலும், பலர் ஸ்ட்ராபெரி பழங்களைச் சாப்பிடும் போது, அதில் ஊசி இருப்பதையும் கண்டுபிடித்தனர். சவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா மாநிலங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனையான ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது.
116 மில்லியன் டாலர்கள் வர்த்தமாகும் ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெரி தொழில், பழங்களில் ஊசியை மறைத்துவைத்திருப்பதாக எழுந்த 200-க்கும் மேற்பட்ட புகார்களை அடுத்து ஆட்டம் கண்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான சூப்பர் மார்க்கெட்டுகள் ஸ்ட்ராபெரி வாங்குவதை நிறுத்தின. இதனால் ஸ்ட்ராபெரி உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஸ்ட்ராபெரி பழத்தில் ஊசியை மறைத்து வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் எச்சரித்தார். பழத்தில் ஊசி வைப்பவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். தற்போது ஸ்ட்ராபெரி பழத்தில் ஊசியை மறைத்து வைத்திருந்ததாக 50 வயதுப் பெண்ணை ஆஸ்திரேலியக் காவல்துறை கைது செய்துள்ளது.
இதுகுறித்து குயின்ஸ்லாந்து போலீஸ் துப்பறிவுத் தலைவர் ஜோன் வாக்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அதிகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வழக்குகளில் இதுவும் ஒன்று'' என்றார்.
கைது செய்யப்பட்ட பெண், ஸ்ட்ராபெரி வர்த்தகத்தின் முக்கியப் பிராண்டுகளில் ஒன்றின் முன்னாள் ஊழியர் என்று குறிப்பிட்ட அவர், எந்த பிராண்டு என்பதைக் குறிப்பிடவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT