

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சேதமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக அதிசயங்களில் பிரம்மாண்டமான ஒன்று சீனப் பெருஞ்சுவர். சீனப் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் யோசனையின் பேரில் இந்தப் பெருஞ்சுவர் கிழக்கே ஹெபேய் மாகாணத்தில் உள்ள ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கே லோப்நுர் வரையில் 8,850 கி.மீ. தூரத்துக்குப் பிரம்மாண்டமாய் நீளும்.
சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல சிறப்புகளைப் பெற்ற சீனப் பெருஞ்சுவர் தற்போது சேதமடைந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இடியும் நிலையில் இருக்கும் பகுதிகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்தாலும் சுவரின் 30% சதவீதம் பலத்த சேதமடைந்து விட்டதால் இதனைச் சரி செய்யும் பணியில் சீன அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும், சீனப் பெருஞ்சுவரின் கட்டுமானங்கள் மிகவும் சிக்கலான முறை என்பதால் அதனை மிகவும் நுட்பமான முறையிலேயே அணுக வேண்டும் என்றும், அதற்காக முதற்கட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட இடங்களில் ட்ரோன்களைக் கொண்டு அளவெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனப் பெருஞ்சுவரின் இந்தப் பாதிப்புக்கு மாறிவரும் நவீன முறைகளே காரணம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.