Published : 28 Nov 2018 05:40 PM
Last Updated : 28 Nov 2018 05:40 PM
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (28-11-18) பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய புனிதத் தலத்துக்கும், இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் புனிதத்தலத்துக்கும் இடையேயான புதிய வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் சீக்கிய யாத்திரிகர்கள் விசா இல்லாமல் இந்தப் புனிதத் தலத்துக்கு வந்து செல்லலாம்.
இந்தியாவுடன் பாகிஸ்தான் நாகரிகமான உறவை விரும்புவதாக இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் கர்தர்பூர் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான கர்தர்பூர் சாஹிப்பின் வழித்தட திறப்பு விழாவில் இம்ரான் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பஞ்சாப் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரும், காங்கிரஸின் எம் எல் ஏவுமான நவ்ஜோத் சிங் சித்துவும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இம்ரான்கான் பேசும்போது, ”நான் இந்தியாவுக்கு எப்போதெல்லாம் பயணம் செல்கிறேனோ அப்போதெல்லாம் அங்கிருந்த மக்கள் என்னிடம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமைதியில் உடன்பாடில்லை என்று கூறி இருக்கிறார்கள்.
நான் உங்களிடம் ஒன்று கூறுகிறேன், நான் தான் பாகிஸ்தானின் பிரதமர், என்னுடைய கட்சி , பிற கட்சிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் எல்லாம் ஒரே பக்கத்தில்தான் இருக்கிறோம்.
நாங்கள் இந்தியாவுடனான உறவில் முன்னோக்கி செல்ல விரும்புகிறோம். நாங்கள் இந்தியாவுடன் நாகரிகமான உறவை விரும்புகிறோம். கடந்த 70 வருடங்களாக நாம் சண்டையிட்டுக் கொண்டு மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறோம்.
இரண்டு தரப்பிலும் தவறுகள் உள்ளன. எவ்வளவு நாள்தான் நாம் ஒருவரை ஒருவர் மாறி மாறி பழி சுமத்திக் கொண்டு இருக்க முடியும்?
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அவ்வளவு பெரிய போருக்குப் பின் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னெடுக்கும்போது நாம் ஏன் அதை செய்யக் கூடாது? தற்போது அந்த இரு நாடுகளும் எல்லைகளை திறந்து வைத்துள்ளன. வணிகம் புரிகின்றனர்.
நம் இரு நாடுகளுக்கும் காஷ்மீரில் நிகழும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற ஒருமித்த எண்ணம் உள்ளது. அது நிச்சயம் நடக்கும். அது நடக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன். நமக்கு இடையே உள்ள வேறுபாடுகளை எரித்து அமைதி உண்டாக, இரு நாட்டு எல்லைகளையும் திறந்து வைப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT