Published : 14 Nov 2018 03:04 PM
Last Updated : 14 Nov 2018 03:04 PM

அமெரிக்காவுக்குத் தெரியாமல் மறைமுக ஏவுகணை சோதனையில் ஈடுபடுகிறதா வடகொரியா?

தொடர்ச்சியாக மறைமுகமாக ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் ஊடங்களின் இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்திருக்கிறார்.

அமெரிக்காவிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி துரோகம் விளைவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்காவின்  நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் வரலாற்றுச் சந்திப்புக்குப் பிறகும் வடகொரியா தொடர்ந்து சக்தி வாய்ந்த அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா தரப்பில் ஏதும் கூறப்படாத நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  வடகொரியாவுக்கு ஆதரவாக தனது பதிவு ஓன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ''வடகொரியா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது என்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது. அவர்களைப் பற்றி எங்களுக்கு நன்கு தெரியும்.

இது ஒரு போலியான செய்தி. வடகொரியா ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டால் அதனை உங்களிடம் கூறுவது முதலில் நானாகத்தான் இருப்பேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

வடகொரியாவுக்கான ட்ரம்ப்பின் இந்த ஆதரவை மீறியும், சர்வதேச அளவில் இயங்கும்  பத்திரிகைகள் வடகொரியா தொடர்ந்து அமெரிக்காவுக்குத் தெரியாமல் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளதால் உலக நாடுகளிடையே  வடகொரியா மீது சந்தேகம் வலுவாக மேலெழுந்துள்ளது.

வடகொரியாவும், அணு ஆயுத சோதனைகளும்

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தகக்து.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x