Published : 13 Nov 2018 11:05 AM
Last Updated : 13 Nov 2018 11:05 AM

அமெரிக்க சிறைகளில் தவிக்கும் 2382 இந்தியர்கள்: சட்டவிரோதமாக குடியேற முயன்று சிக்கினர்

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக  2 ஆயிரத்து 382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளள தகவல் வெளியாகியுள்ளது.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் ஏராளமான சீக்கியர்கள் இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் சென்று அங்கேயே தங்கி விட்டனர். அங்கு வெற்றிகரமாக வரத்தகம் செய்யும் இவர்கள் பெரும் பணக்காரர்களாகவும் உள்ளனர்.

 இதன் தொடர்ச்சியாகவே பஞ்சாபில் இருந்து ஏராளமானோர் அமெரிக்காவிற்கு செல்கின்றனர். படித்தவர்கள், மென்பொருள் பொறியாளர்கள் போன்றவர்களுக்கு அமெரிக்கா செல்ல எளிதில் விசா கிடைத்து விடுகிறது.

ஆனால் ஹோட்டல் போன்ற வணிகம் செய்யும் நோக்கத்துடன் அங்கு செல்ல விரும்பும் பஞ்சாபியர்களுக்கு விசா எளிதில் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் சட்டவிரோதமான முறையில் அங்கு செல்ல முற்படுகின்றனர்.

பல நாடுகளுக்கு மாறி மாறி சென்று, அமெரிக்க விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு உள்ளே நுழைவது எளிதான காரியம் அல்ல. இவ்வாறு சட்டவிரோதமாக செல்பவர்களை அழைத்து செல்ல பஞ்சாபில் பெரிய குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைய பல லட்சம் செலவு செய்கின்றனர்

அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் கையில் சிக்கி சிறை சென்ற பஞ்சாபியர்களை மீட்க அமெரிக்காவில் பெரிய குழுவே செயல்படுகிறது. இவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் வழக்கு நடத்தி அவர்கள் வெளியே வந்து விடுகின்றனர்.

இவ்வாறு சட்டவிமோதமான முறையிலாவது எப்படியாவது அமெரிக்கா சென்று விட வேண்டும் என்ற ஏக்கம் சீக்கிய இளைஞர்களிடம் அதிகம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கடுமையாக தண்டித்து வருகிறார். குறிப்பாக மெக்ஸிகோ வழியாக தஞ்சம் புகும் அகதிகளை தடுத்து நிறுத்தி கைது செய்வதுடன் அவர்களின் குழந்தைகளையும் பிரித்த கொடுமை படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக  2382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள 86 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக  தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்க பஞ்சாபிகள் சங்கம் மூலம் பெறப்பட்ட இந்த தகவலின் அடிப்படையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பல லட்சங்கள் கொடுத்து போலி தரகர்களின் பேச்சை நம்பி ஏமாந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இவ்வாறு அமெரிக்க சிறையில் வாடும் இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவு அமைச்சகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாபி சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x