Published : 11 Oct 2018 01:31 PM
Last Updated : 11 Oct 2018 01:31 PM

ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கும் விவகாரம்: இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா? - ட்ரம்ப் பதில்

ரஷ்யாவிடம் எஸ் - 400 ஏவுகணையை வாங்கும் முடிவில் இந்தியா மீது  பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு ட்ரம்ப் பதிலளித்திருக்கிறார்.

ரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்தியா கைவிடவில்லை என்றால்,  ரஷ்யாவிடம் ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகள் தடை செய்யப்பட்ட பட்டியலின் கீழ் இந்தியா சேர்க்கப்பட்டு தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலை பொருட்படுத்தமால் ரஷ்யாவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்தது இந்தியா. இதனைத் தொடர்ந்து இந்திய - அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது.

 மேலும் அமெரிக்க  அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்தியா குறித்து ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ட்ரம்ப் பதிலளித்தபோது, "இந்தியா குறித்து முடிவு விரைவில் அறிவிக்கப்படும். நீங்கள் நினைப்பதற்கு முன்னதாகவே இந்தியா குறித்த முடிவை அறிவிப்பேன்" என்று கூறினார்

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, ”இந்தியா போன்ற நட்புக் நாடுகளை தண்டிக்கும் நோக்கத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை”என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x