மேற்கத்திய நாடுகளே ஜிகாதிகளின் அடுத்த இலக்கு: சவுதி மன்னர் எச்சரிக்கை

மேற்கத்திய நாடுகளே ஜிகாதிகளின் அடுத்த இலக்கு: சவுதி மன்னர் எச்சரிக்கை
Updated on
1 min read

ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சிரியா, இராக்கை அடுத்து, அவர்களின் இலக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் என்று சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

சகோதர நாடுகளின் தூதர்களுக்கான சந்திப்பின்போது இது குறித்து மன்னர் அப்துல்லா பேசியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில், "நாம் அவர்களை புறக்கணித்தால், அவர்கள் அடுத்த மாதம் ஐரோப்பாவிற்கு குறி வைப்பார்கள். அதற்கு அடுத்து மாதம் அமெரிக்கா மீது.

தீவிரவாததிற்கு எல்லைகள் இல்லை. அவர்களின் செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியேயும் செல்லலாம். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏற்க முடியாத பின்விளைவுகளை சந்திக்க நேரலாம்.

தலையை வெட்டி படுகொலை செய்யும் அவர்களது கொடூர குணம், மிகுந்த கண்டிப்பிற்குரியது. இது புதியதோர் செய்தி இல்லை. அவர்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டனர். இனி செய்வதற்கு ஏதும் இல்லை. இதனை அனைத்து தலைவர்களும் ஏற்று, தீவிரவாததிற்கு எதிரான வேகமான உரிய நடவடிக்கைகளை தகுந்த சமயத்தில் எடுக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் சவுதிக்கான அமெரிக்க தூதரக அதிகாரியும் கலந்துகொண்டார். ஐ.எஸ்.ஐ.எஸ் தனது ஆதிக்கத்தை சிரியா மற்றும் இராக்கில் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக அந்த இரு நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான தீவிர தாக்குதல் குறித்த அமெரிக்க அதிபர் ஒபாமா தனது முடிவை வெளியிடாமல் உள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in