

ரோஹிங்கியா விவகாரத்தில் மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி மீது எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து அவருக்கு வழங்கிய கவுரவ குடியுரிமைப் பட்டத்தைத் திரும்பப் பெறுவதாக கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா விவகாரத்தை சூச்சி கையாண்ட விதத்தை விமர்சித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கனடாவின் கவுரவ குடியுரிமைப் பதவிக்குத் தகுதியானவரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், கனடா நாடாளுமன்றத்தில் ரோஹிங்கியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தடுக்கத் தவறியதன் காரணமாக சூச்சிக்கு வழங்கப்பட்ட கவுர குடியுரிமைப் பட்டத்தைத் திரும்பப் பெறக் கூறிய தீர்மானத்தில் ஒரு மனதாக வாக்களிப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2007-ம் ஆண்டு கனடா அரசின் கவுரவ குடியுரிமைப் பட்டம் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டது. கனடா அரசு வெகு சிலருக்கு மட்டுமே இப்பட்டத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த மோதல் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது.
இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர்.