Last Updated : 29 Oct, 2018 06:35 PM

 

Published : 29 Oct 2018 06:35 PM
Last Updated : 29 Oct 2018 06:35 PM

இலங்கை அரசியலில் பரபரப்பு: துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா திடீர் கைது

இலங்கை அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பான நிகழ்வு அரங்கேறியுள்ளது, அமைச்சர் ரணதுங்கா மீது தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான நிலையில், அது தொடர்பாக ரணதுங்காவையே இன்று போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை அரசியலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஏராளமான குழப்பம் அரங்கேறி வருகிறது. இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன.

ஆனால், ரணில் விக்ரமசிங்கேவுக்க அளித்த வந்த ஆதரவை வெள்ளிக்கிழமை திடீரென வாபஸ் பெற்ற சிறீசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார்.

அதன்பின், ராஜபக்சேயுடன் (இலங்கை மக்கள் முன்னணி) கூட்டணி அமைத்த அதிபர் சிறீசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.

அதிபராக இருந்து தமிழர்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் செய்த ராஜபக்சே பிரதமராக வந்தது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் ராஜகபக்சே, சிறிசேனா ஆகிய இருவருக்கும் நாடாளுமன்றத்தில் 95 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 இடங்கள் உள்ளன. இன்னும் பெரும்பான்மைக்கு 7 இடங்கள் மட்டுமே தேவை. பெரும்பான்மை இல்லாத ஒருவர் பிரதமராக முடியாது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல், ராஜபக்சேவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட, அதிபர் சிறீசேனா, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முற்படும்போது ராஜபக்சே தோல்வி அடையக்கூடும் என்பதால், நவம்பர் 16-ம் தேதிவரை நாடாளுமன்றத்தை முடக்க உத்தரவிட்டார்.

மேலும், ராஜபக்சேதான் பிரதமர் என்று அதிபர் சிறீசேனா ஒருபுறம் அறிக்கை வெளியிட்டார். அதேசமயம், ரணில் விக்ரமசிங்கேவும், அதிகாரப்பூர்வமான பிரதமர் நான்தான் என்று அவரும் பதிலுக்கு அறிக்கை வெளியிட்டதால், பெரும்அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே சட்டப்பூர்மான பிரதமர் ரணில் விக்ரம சிங்கேதான் என்று அறிவித்த சபாநாயகர் ஜெயசூர்யா, விக்ரமசிங்கேவுக்கு வாபஸ் பெறப்பட்ட பாதுகாப்பை திரும்பப் அளிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தை முடக்கவும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த சூழலில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரரான அர்ஜூனா ரணதுங்கா. விக்ரமசிங்கேவுக்கு மிகவும் விசுவாசியான ரணதுங்காவை அமைச்சர் பதவியில் இருந்து ராஜபக்சே நீக்கினார்.

இந்நிலையில் தெம்டகோடா நகரில் உள்ள சிலோன் பெட்ரோலியத்துறை அலுவலகத்துக்கு அமைச்சர் ரணதுங்கா நேற்று வந்தார். அப்போது அங்கிருந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவை உள்ளே நுழையஅனுமதிக்கவில்லை, அவரைத் தாக்கவும் முற்பட்டனர்.

 

இதனால், அமைச்சர் ரணதுங்காவின் பாதுகாவலர்கள் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அமைச்சர் ரணதுங்காவை போலீஸார் இன்று கைது செய்தனர், மேலும் துப்பாக்கி சூடுநடத்திய இருபாதுகாவலர்களையும் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x