Last Updated : 28 Oct, 2018 02:19 PM

 

Published : 28 Oct 2018 02:19 PM
Last Updated : 28 Oct 2018 02:19 PM

‘யூதர்கள் சாக வேண்டும்’- அமெரிக்காவில் யூதர்கள் வழிபாட்டுத் தலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் யூதர்கள் வழிபாட்டுத் தலத்தின் அருகே நடுத்தர வயதுக்காரர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர், யூதர்கள் சாக வேண்டும், எங்கள் மக்கள் வாழ வேண்டும் என்ற கோஷத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால், வெறுப்புணர்வுடன் நடத்தப்பட்ட தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிடிஸ்பர்க் நகரில் உள்ள வெண்டில் ஹிஸ்ரிச் பகுதியில் யூதர்களின் வழிபாட்டுத் தலம் இருக்கிறது. இங்கு நேற்று ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டு நிகழ்ச்சி நடந்தது. இதற்கான 50-க்கும் மேற்பட்டோர் அந்த வழிபாட்டுத் தலத்துக்கு வந்திருந்தனர்.

அப்போது, காலை 9.50 மணி அளவில் அங்கு வந்த, நடுத்தர வயதுக்காரர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது சுடத் தொடங்கினார். மேலும், சுடும்போது, யூதர்கள் சாக வேண்டும், எங்கள் மக்கள் வாழ வேண்டும் என்று கூறிக்கொண்டு தனது துப்பாக்கியால் சுட்டார்.

இதைப் பார்த்த மக்கள் அங்கிருந்து சிதறி நாலாபுறமும் ஓடினார்கள். பலர் குண்டுக்காயம் பட்டுச் சுருண்டு விழுந்தனர். இதையடுத்து, உடனடியாக அங்கிருந்தவர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியநபரை சுற்றி வளைத்தனர்.

ஆனாலும், அந்த நபர் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டார். இதில் போலீஸார் 4 பேர் காயமடைந்தனர். அதன்பின் தீவிர சண்டைக்குப் பின் அந்த நபரைச் சுட்டு போலீஸார் கைது செய்தனர். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அந்த நபர் பெயர் ராபர்ட் பாவர்ஸ்(வயது46) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, காயமடைந்த அந்த ராபர்ட் பாவர்ஸை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர், 4 போலீஸார் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பென்சிலவேனியா மாவட்ட போலீஸ் தலைவர் ஸ்காட் பிராடி கூறுகையில் ‘‘துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவரின் நோக்கம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், அந்த நபர் சுடும்போது யூதர்கள் சாக வேண்டும், எங்கள் மக்கள் வாழ வேண்டும் என்று கோஷத்துடன் சுட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். வெறுப்புணர்வுடன் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம்’’ என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தக் கொடூர கொலைச் சம்பவம் குறித்து அறிந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்தார். அவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘இனவெறியுடன், வெறுப்புணர்வுடன் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது. இதைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x