Published : 27 Oct 2018 05:04 PM
Last Updated : 27 Oct 2018 05:04 PM
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால்.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.
இது தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.
துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது.
இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக் கொண்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜமால் கொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
சம்பவம் நடந்த துருக்கியில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்நாடு கூறி வருகிறது. ஆனால் இந்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் அடெல் அல் ஜுபைர் கூறுகையில் ‘‘ஜமால் கொலை தொடர்பாக சவுதி அரேபியாவை சேர்ந்த 18 பேரையும் நாங்கள் கைது செய்து காவலில் அடைத்துள்ளோம். இதுதொடர்பான விசாரணையும் சவுதி அரேபியா நாட்டில்தான் நடைபெறும். இதில் 3வது நாட்டின் தலையீட்டுக்கு வாய்ப்பே இல்லை’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT