Published : 24 Oct 2018 10:58 AM
Last Updated : 24 Oct 2018 10:58 AM
கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமாலின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டிலுள்ள தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை லண்டனில் இயங்கும் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், ”கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகப் பொதுச் செயலாளர் இல்லத்திலுள்ள தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜமாலின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் அந்த தோட்டத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
துருக்கியின் ரோடினா கட்சியின் தலைவர் டோகு ப்ரென்சிக் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஜமால் சவுதியால் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று இந்தக் கொலை சம்பவத்தில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜமாலின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால்.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.
இது தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.
துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து ஜமால் கொல்லப்பட்டத்தை சவுதி ஒப்புக் கொண்டது.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT