Last Updated : 13 Aug, 2018 07:19 AM

 

Published : 13 Aug 2018 07:19 AM
Last Updated : 13 Aug 2018 07:19 AM

சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்ய ‘பார்க்கர்’ விண்கலத்தை செலுத்தியது நாசா

சூரியனை மிக அருகில் இருந்து ஆய்வு செய்வதற்காக, புதிய விண்கலம் ஒன்றை நாசா நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

பூமியைப் போலவே வேற்றுக் கிரகங்களில் தண்ணீர், காற்று உள்ளதா, மனிதர்கள் உயிர் வாழும் சூழல் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதற்காக பல விண்கலங்களும் அனுப்பப் பட்டுள்ளன. பல அரிய புகைப் படங்களும் கிடைத்துள்ளன. ஆனால், சூரியனை தொலைவில் இருந்து மட்டுமே ஆய்வு செய்யும் நிலை உள்ளது. அதற்கு சூரிய னின் வெப்பம்தான் காரணம்.

இந்நிலையில், சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யும், ‘பார்க்கர் சூரிய ஆய்வு’ விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்காக 1.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி). புளோரிடாவின் கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து ‘டெல்டா 4-ஹெவி ராக்கெட்’ மூலம் பார்க்கர் விண்கலம், உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3.31 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஆளில்லா விண்கலம் ஒரு கார் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, நமது சூரிய வளி மண்டலத்தில் சூரியனுக்கு மிகமிக அருகில் சென்று இது ஆய்வு செய்யும்.

அபரிமிதமான வெப்பத்தில் இருந்து காப்பாற்ற 4.5 அங்குலத் துக்கு ‘அல்ட்ரா வெப்ப தகடுகள் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள் ளன. அதனால் சூரியனை விண்கலம் நெருங்கும்போது அதிக வெப்பத்தில் வெடித்து சிதறாமல் இருக்கும். இந்த விண்கலம் ஒரு மணி நேரத்துக்கு 4,30,000 மைல் வேகத்தில் செல்லும். பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு வெளியில், மனிதர்கள் உருவாக்கிய பொருள் ஒன்று இவ்வளவு வேகத்தில் செல்வது இதுவே முதல்முறை.

சூரியனில் இருந்து காந்தப் புயல்கள் வெளிப்படுகின்றன. இதனால் பூமியில் சில நேரங்களில் தொலைத்தொடர்புகள், மின் கட்டமைப்புகள் பாதிக்கப்படுகின் றன. எனவே, இந்த பார்க்கர் விண்கலம் காந்தப் புயல்கள் குறித்த ஆய்வில் முக்கியமாக ஈடுபடும். சூரியனைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தை ஆராயும்.

இந்தப் பார்க்கர் விண்கலம் 7 ஆண்டுகள் சூரியனுக்கு மிக அருகில் இருந்து ஆய்வு செய்யும். அங்கிருந்து புகைப்படங்கள், தகவல்களை அனுப்பும். அதன் மூலம் சூரியனைப் பற்றிய பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

‘‘எதிர்காலத்தில் சூரியனில் இருந்து காந்தப் புயல்கள் வெளிப்பட்டு பூமியைத் தாக்கும் நிலை ஏற்படுவதை முன்கூட்டியே அறியலாம். அதன்மூலம் பூமியைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க முடியும்’’ என்று பார்க்கர் விண்கலத் திட்ட விஞ்ஞானி ஜஸ்டின் கஸ்பர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்காலத்தில் ஆராய்ச்சிக்காக நிலவு, செவ்வாய் போன்றவற்றில் விண்வெளி ஆய்வில் ஈடுபட செல்பவர்களைப் பாதுகாக்கவும் முடியும் என்று அவர் கூறியுள்ளார். நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரகரத்தின் தலைவர் தாமஸ் ஸர்புசென் கூறும்போது, ‘‘எங்கள் விஞ்ஞானிகள் சமூகத்தில் பார்க்கர் விண்கலம் மிகப்பெரிய ஹீரோ’’ என்று வர்ணித்தார்.

இயற்பியலாளர் ‘பார்க்கர்’ பெயர்

சூரியனில் இருந்து காந்தப் புயல்கள் வீசுவது குறித்து கடந்த 1958-ம் ஆண்டு முதன்முதலில் கூறியவர் யூஜின் பார்க்கர். தற்போது அவருக்கு 91 வயதாகிறது. விண் இயற்பியல் துறையில் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். அவரை கவுரவிக்கும் வகையில், ‘பார்க்கர் சூரிய ஆய்வு’ விண்கலம் என்று நாசா பெயர் சூட்டியுள்ளது. உயிருடன் உள்ள ஒருவரின் பெயரில் இதுவரை எந்த விண்கலத்துக்கும் பெயர் சூட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பார்க்கர் கடந்த வாரம் கூறும்போது, ‘‘சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புவது எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. அந்த விண்கலம் மிகவும் சிக்கலானது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x