

பாகிஸ்தான் பிரதமராகப் பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் அந்நாட்டில் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான இல்லத்தில் தங்க மறுத்திவிட்டார்.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றது.
இதையடுத்து 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 172 உறுப்பினர்கள் தேவை. இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்ற இடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைச் சேர்க்கும் போது அந்தக் கட்சிக்கு 176 பேரின் ஆதரவு கிடைத்து ஆட்சி அமைக்கும் தகுதி பெற்றது.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார். இந்த நிலையில் பிரதமருக்காக ஒதுக்கப்படும் இல்லத்தில் தங்க இம்ரான் கான் மறுத்துவிட்டார்.
இதுகுறித்து இம்ரான் கான் கூறும்போது, "நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. அங்கு பிரதமருக்கு பணி செய்ய 524 ஊழியர்கள் இருக்கிறர்கள். 80 கார்கள் உள்ளன. அதில் 33 கார்கள் புல்லட் புருஃப் வசதி கொண்டவை. நான் பறப்பதற்கு விமானம், ஹெலிகாப்டர்கள் உள்ளன. நமது கவர்னர்களுக்கு ஆடம்பரமான மாளிகைகள் தங்குவதற்கு வழங்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது?ஆனால், மறுபக்கத்தில் நம்முடைய மக்களுக்கு உதவுவதற்குப் பணம் இல்லை.
நான் பனிகலாவில் உள்ள எனது இல்லத்தில் தங்கவே விரும்புகிறேன். ஆனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராணுவ செயலாளரின் இல்லத்தில் தங்க முடிவு செய்து இருக்கிறேன். எனக்கு உதவுவதற்கு இரண்டு ஊழியர்களும் இரண்டு கார்களும் போதும். இந்த முடிவை நான் என் விருப்பத்துக்கு மாறாகவே எடுக்கிறேன்" என்று கூறியுள்ளார்.