

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் 14-ம் தேதி நடத்தும் போராட்டத்தில் இம்ரான் கான் முதல் முறையாக மகன்களைக் களமிறக்குகிறார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ராம்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் 14-ம் தேதி அரசுக்கு எதிராக விடுதலை நடைப்பயணம் நடைபெற உள்ளது.
நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி கடந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து ஆட்சி வந்ததாக தெஹ்ரீக் இ இன்சாப் குற்றம் சாட்டி வருகிறது. தேர்தல் சீர்திருத்தம் மேற்கொண்டு, நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.
நவாஸ் ஷெரீப் ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இம்ரான்கான் அறிவித்துள்ள போராட்டம் அரசுக்கு எதிராக மக்களிடம் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்தப் போராட்டத்தில் இம்ரான்கானின் மகன்கள் சுலைமான் (18), காசிம் (15) ஆகிய இருவரும் பங்கேற்க இருப்பதாக பாகிஸ்தான் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இம்ரான்கானின் மகன்கள் இருவரும், அவரது முன்னாள் மனைவி ஜெமீமா கானுடன் பிரிட்டனில் வசிக்கின்றனர். இதற்கு முன் இவர்கள் பாகிஸ்தான் வந்தபோதிலும் இம்ரான்கானுடன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. இந்நிலையில் முதல்முறையாக இம்ரான்கானின் மகன்கள் ஆகஸ்ட் 14 போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் இதற்காக முந்தைய நாள் அவர்கள் பாகிஸ்தான் வரவிருப்பதாகவும் அந்நாளேடு கூறுகிறது.
பாகிஸ்தானில், தலைவர்களின் குடும்பம் அரசியலில் ஈடுபடுவது பாரம்பரியாக உள்ளது. இந்நிலையில் கட்சி நிகழ்ச்சியில் இம்ரான்கான் முதல்முறையாக தனது மகன்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
“கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியேற மாட்டேன். சாலையிலேயே எனது ஆதரவாளர்கள் படுத்து உறங்குவேன்” என்று இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
இம்ரான்கானின் போராட்ட அறிவிப்பு காரணமாக இஸ்லாமாபாத்தில் சட்டம் ஒழுங்கை காக்கும் பொறுப்பை கடந்த 1-ம் தேதி முதல் ராணுவத்தின் வசம் அரசு ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.