

தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் வருங்காலத்தில் கால்பந்து வீரராகவும், தாய்லாந்தின் முக்குளிப்பு வீரராகவும் ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10கி.மீ நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். தாய்லாந்து மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட சிறுவர்கள் கால்பந்து அணி கடந்த ஜூன் 23-ம் தேதி இந்தக் குகைக்கு சென்றனர்.
இந்த சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றனர். அப்போது அங்கு பெய்த கடுமையான மழை காரணமாக குகையில் சிக்கிக் கொண்டனர். பின்னர் 18 நாட்கள் போராட்டங்களுக்கு பிறகு அனைவரும் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் புதன்கிழமை அவர்கள் பங்கேற்றனர். பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன் மாணவர்கள் ஒருவரை கட்டிப் பிடித்துக் கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.
பத்திரிகையாளர்கள் கேள்விக்கு சிறுவர்கள் பதிலளித்தாவது,
செய்தியாளர் ஒருவர் பிரிட்டிஷ் வீரர்களை கண்டது அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டார், அதற்கு சதுல் சமோன் என்ற சிறுவன், "பிரிட்டிஷ் முக்குளிப்பு வீரர்களின் குரலை கேட்டதும் நாங்கள் முதலில் அதை நம்பவில்லை. நான் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் அது உண்மையாக மாறியது” என்றார்.
தொடர்ந்து சிறுவர்களை மீட்புப் பணியில் உயிரிழந்த தாய்லாந்து கடற்படை வீரர் சமான் குனானுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார். அப்போது அந்த சிறுவர்கள் குழுவிலிருந்த சனினி என்ற சிறுவன் அழத் தொடங்கினார். இதனால் சிறிது நேரம் அங்கு அனைவரும் உணர்ச்சிவசமாயினர்.
தொடர்ந்து, குகையில் சிக்கிக் கொண்ட அனுபவம் எப்படி இருந்தது என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "நான் இப்போது மேலும் வலுவடைந்திருக்கிறேன். எனக்கு அதிக பொறுமை, சகிப்புத்தன்மை வந்திருக்கிறது” மங்கோல் பூன்பியம் என்ற 13 வயது சிறுவன் கூறினான்.
மேலும், தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் வருங்காலத்தில் கால்பந்து வீரராகவும், தாய்லாந்தின் முக்குளிப்பு வீரராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பிறகு மீட்கப்பட்ட 13 பேரும் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.