இஸ்ரேலில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வாபஸ்

இஸ்ரேலில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வாபஸ்
Updated on
1 min read

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதால் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அத்தியாவசியமற்ற அதிகாரிகளை திரும்ப அழைக்கும் பணியை அந்த நாடு தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய அமெரிக்க தூதரகத்தில் கூடுதலாக பணியாற்றி வந்த தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விமானம் மூலம் வெளியேற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை புதன்கிழமை நடவடிக்கை எடுத்தது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “ எத்தனை தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் இல்லை. அதேபோன்று, தரைவழியாக ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளுக்கு சென்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறித்தும் தெரியவில்லை.

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி எக்ஸ் தளத்தில் அமெரிக்க மக்களை வெளியேற்ற விமானம் மற்றும் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பதற்கு சற்று முன்னதாகவே அமெரிக்க மீட்பு விமானம் இஸ்ரேலில் தரையிறங்கி விட்டது" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in