பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பிலாவல் பூட்டோ

பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பிலாவல் பூட்டோ
Updated on
1 min read

நியூயார்க்: பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை என அமெரிக்காவில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சிக் குழு வாஷிங்டனுக்கு வந்துள்ள நாளில், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழுவும் தங்கள் தரப்பின் கருத்தை எடுத்துரைக்க நியூயார்க் வந்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான பிலாவல் பூட்டோ, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த ஒரு மாநாட்டில் ஆற்றிய உரையில், “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை. மக்களின் தலைவிதியை அரசு சாராதவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கைகளில் விட்டுவிட முடியாது. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே தகராறை தீர்க்கும் வழிமுறைகள் இல்லாமல் இருக்க முடியாது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் இந்திய உளவு அமைப்பான ரா (RAW) ஆகியவை அமர்ந்து பேசி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடத் தயாராக இருந்தால், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பயங்கரவாதம் கணிசமாகக் குறைவதைக் காண்போம் என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

ஆபரேஷன் சிந்தூரின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களாலும், இந்தச் சூழ்நிலையில் அமைதியைத் தேட வேண்டிய தேவையாலும் பாகிஸ்தான் எவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பூட்டோவின் தற்போதைய சமாதான நிலைப்பாடு காட்டுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தால் பாகிஸ்தான் தரப்பு பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. இந்திய விமானப்படையால் பாகிஸ்தான் விமானப்படைக்கு ஏற்பட்ட சேதம் குறித்த தொடர்ச்சியான பகுப்பாய்வின்படி, 6 பிஏஎப் போர் விமானங்கள், இரண்டு உயர் மதிப்புள்ள விமானங்கள், 10-க்கும் மேற்பட்ட யுசிஏவி (UCAV), ஒரு சி-130 போக்குவரத்து விமானம் மற்றும் பல கப்பல் ஏவுகணைகள் ஆகியவை இந்திய வான்வழி ஏவுகணைகள் மற்றும் தரையிலிருந்து பாயும் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டன எனும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in