இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு மலேசியா ஆதரவு

இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு மலேசியா ஆதரவு

Published on

கோலாலம்பூர்: தீவிரவாத எதிர்ப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மலேசியா வலுவான ஆதரவு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் எடுத்துரைக்க எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு மலேசியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தது.

அப்போது தேசிய ஒற்றுமைக்கான துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, வன்முறைக்கு எதிரான மலேசியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அப்போது அவர் “இந்தியா போரில் ஆர்வம் காட்டவில்லை, மாறாக அதன் பொருளாதாரப் பாதை மீதே கவனம் செலுத்துகிறது. தீவிரவாதத்தை கைவிடவும் மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடவும் பாகிஸ்தானை மலேசியா போன்ற நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

வன்முறையை கண்டிக்கவும் அமைதியை ஆதரிக்கவும் மலேசியா தயாராக உள்ளது. வறுமை மற்றும் மோதல் சுழற்சியை உடைக்க நட்பு நாடுகள் உதவ வேண்டும் என இந்தியாவின் அழைப்பை மலேசியா ஏற்கிறது" என்றார்.

மலேசியாவின் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனநாயக நடவடிக்கை கட்சியும் (டிஏபி) இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தது. இக்கட்சியின் குலசேகரன் முருகேசன் கூறுகையில், “இந்தியா தனது தேச நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது, எதிர்காலத்தில் இதுபோன்ற எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களை நாம் காணக்கூடாது என நம்புகிறோம்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in