பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

‘இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயார்’ - பாக். பிரதமர்

Published on

தெஹ்ரான்: இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து எங்கள் அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தின. இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சர்வதேச நாடுகளின் உதவியை பாகிஸ்தான் நாடியது. இறுதியில் பாகிஸ்தான் மூத்த தளபதி நேரடியாக இந்திய ராணுவ மூத்த தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10-ம் தேதி இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். அதே நேரத்தில் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் மூன்றாவது நபருக்கு இடமில்லை என இந்தியா ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in