சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி
Updated on
1 min read

சிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 18 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு கூறும்போது, "சிரியாவில் அல் பஸ்யரா நகரில் அரசுப் படைகள் பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 18 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தப் பகுதியில்  ஐஎஸ் தீவிரவாதிகள் இதற்கு முன்னர் தாக்குதலை நடத்தி இருப்பதால் இந்தத் தாக்குதலையும் அவர்களே நடத்தி இருப்பார்கள் என்று சிரிய அரசுப் படை சந்தேகம் தெரிவித்துள்ளது.

சிரியா போர்

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அதிபர் ஆசாத்துக்கு உதவியாக ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும்,  ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தினர் கடந்த 3 மாதங்களாக அங்கு முகாமிட்டுள்ளனர். மேலும், அந்நாட்டில் உள்ள ரசாயன ஆலைகள், ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீதும் அமெரிக்கப் படையினர் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in