Published : 31 Jul 2018 05:01 PM
Last Updated : 31 Jul 2018 05:01 PM

ஈரான் அதிபரை நிச்சயமாக சந்திப்பேன்: ட்ரம்ப்

ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியை நிச்சயமாக சந்திப்பேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இத்தாலி அதிபருடனான நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை தெரிவித்தார்.

அதில் ஈரான் குறித்த கேள்விக்கு ட்ரம்ப்  பதில் அளிக்கும்போது, “எனக்கு சந்திப்பில் நம்பிக்கை உள்ளது.  நான் ஈரானியர்களை சந்திக்கவே விரும்புகிறேன். அதுதான் நமது நாட்டுக்கு, உலகிற்கும் நல்லது. அதில் எந்த நிபந்தனையும் இல்லை. ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி என்னை சந்திக்க விரும்புனால் நான் நிச்சயம் அவரை சந்திப்பேன்”  என்றார்.

முன்னதாக, 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது .

இதனை தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் இடையே வார்த்தை மோதல் வலுத்து வந்தது.

அமெரிக்காவின் தொடர் மிரட்டலை தொடர்ந்து,  ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, "ஈரானுடனான சமாதானம் என்பது சமாதானங்களுக்கெல்லாம் தாய். ஈரானுடனான போர் என்பது அனைத்து போர்களுக்கெல்லாம் தாய் என்பதை அமெரிக்கா அறிந்திருக்க வேண்டும்”என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடியாக ட்ரம்ப் "மீண்டும் அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டாம். இல்லையேல் வரலாற்றில் இதற்கு முன் ஈரான் அனுபவிக்காத துன்பத்தை அனுபவிக்க நேரிடும். பாதுகாப்பாக இருங்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x