Last Updated : 10 May, 2025 02:34 PM

1  

Published : 10 May 2025 02:34 PM
Last Updated : 10 May 2025 02:34 PM

‘இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்’ - பாக். வெளியுறவு அமைச்சர்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் - கோப்புப் படம்

இஸ்லாமாபாத்: இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ பாகிஸ்தான் துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் பேசினார். அப்போது “இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்கும் வழிவகைகளை ஆராய வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார். அதற்கு, “இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம்.” என்று இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

‘சீண்டும் பாகிஸ்தான்’ - முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று (மே 10) நடைபெற்றது. அதில் பேசிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், “பாகிஸ்தானின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டக் கூடியதாகவும், பதற்றத்தைத் தீவிரப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதை இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் நான் சுட்டிக்காட்டி உள்ளேன். இதற்கு இந்தியா பொறுப்புடனும், அளவிடப்பட்ட முறையிலும் பாதுகாப்புக்கான எதிர்வினையை ஆற்றி உள்ளது.

பாகிஸ்தான் இந்திய தளங்களை குறிவைப்பது குறித்து தொடர்ந்து பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்பி வருகிறது. இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்பு, மின் அமைப்புகள், சைபர் அமைப்புகள் போன்றவற்றின் பெரும் பகுதிகள் தாக்கப்பட்டு அழிக்கப்படுவதாகக் கூறப்படும் கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை..” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

அமெரிக்காவின் சமரச முயற்சி: இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, “போர்ப் பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை செய்யுமாறும், ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்க மத்தியஸ்தம் செய்யத் தயாரக இருப்பதாகவும்,” பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தினார்.

தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அழைத்துப் பேசிய ரூபியோ, “தவறான புரிதல்களைத் தவிர்த்து இரண்டு தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து, நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். எதிர்கால சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில்தன், இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்தத் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா கவலை: அமெரிக்காவைப்போல், இந்தியா - பாகிஸ்தான் மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது தங்களுக்கு கவலை அளிப்பதாக சீன வெளியறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இரு நாடுகளும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை சார்ந்து செயல்படவும், அமைதியை கடைப்பிடிக்கவும், சுமுகமான வழியில் அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காணவும், பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டாம் என வலியுறுத்துகிறோம்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாக். மோதல்: நடப்பது என்ன? - கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடிப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x