‘அந்தத் தருணம்...’ - போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் ஜே.டி.வான்ஸ் விவரிப்பு

‘அந்தத் தருணம்...’ - போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் ஜே.டி.வான்ஸ் விவரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: போப் பிரான்சிஸை சந்தித்த கடைசி உலகத் தலைவராக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறியப்படுகிறார். அந்தச் சந்திப்பு குறித்து ஜே.டி.வான்ஸ் விவரித்துள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். அவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20) வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கார்டினல் ஏஞ்சலோ கோமாஸ்ட்ரி தலைமையில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவின் முடிவில், போப் பிரான்சிஸை குடும்பத்துடன் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தின் பல கொள்கைகளை போப் மற்றும் வாடிகன் அதிகாரிகள் விமர்சித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் அவரது திட்டங்களும் அடங்கும். இதனிடையே, இந்தியா வந்துள்ள ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “போப் பிரான்சிஸ் காலமான செய்தியை இப்போதுதான் அறிந்தேன். உலகம் முழுவதும் அவரை நேசித்த கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கு என் இதயம் இரங்குகிறது.

நேற்று அவரைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன், இருப்பினும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் கோவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய மறையுரைக்காக நான் எப்போதும் அவரை நினைவில் கொள்வேன். அது மிகவும் அழகாக இருந்தது. கடவுள் அவரது ஆன்மாவை அமைதிப்படுத்தட்டும்” என தெரிவித்துள்ளார். மேலும் நேற்று போப், வான்ஸுக்கு ஜெபமாலைகள், மூன்று பெரிய சாக்லேட் மற்றும் ஈஸ்டர் முட்டைகளின் தொகுப்பை அவரது குழந்தைகளுக்கு வழங்கினார்.

இந்த மாத தொடக்கத்தில், சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோர் வாடிகனுக்கு முறையான அரசு விஜயம் மேற்கொள்ளவிருந்தனர். ஆனால், போப் பிரான்சின் உடல் நலன் கருதி, யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படாததால், அவர்களின் திட்டங்களை ஒத்திவைத்தனர். போப் இந்த அரச தம்பதியினரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவர்களின் 20-வது திருமண ஆண்டு விழாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

சார்லஸ் மன்னராவதற்கு முன்பு, போப் பிரான்சிஸும், சார்லஸும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சந்தித்துள்ளனர். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் 2014 இல் வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in