Published : 30 Aug 2014 10:00 AM
Last Updated : 30 Aug 2014 10:00 AM

குர்து வீரரின் தலை துண்டிப்பு: இராக்கில் ஐ.எஸ் கொடூரம்

இராக்கில் சிறுபான்மையினரான குர்து இன போராளி ஒருவரது தலையை துண்டித்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) தீவிரவாத அமைப்பு.

அமெரிக்காவுடன் இணைந்து செயல்படக் கூடாது என்று குர்து இன தலைவர்களுக்கு அந்த வீடியோ மூலம் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலேயின் தலையை துண்டித்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டனர். இப்போது மீண்டும் ஒரு தலை துண்டிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள், இராக்கில் சிறுபான்மையினராக உள்ள ஷியா முஸ்லிம்கள், குர்து இனத்தவர்கள், கிறிஸ்தவர்களை குறி வைத்து வேட்டையாடி வருகின்றனர்.

இதனால் குர்து போராளிகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அமெரிக்க போர் விமானங்கள் வடகிழக்கு இராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குர்து தலைவர்களுக்கு எச்சரிக்கை

தீவிரவாதிகள் இப்போது வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில் மூன்று குர்து போராளிகள், கைகள் பின்புறமாக கட்டி வைக்கப்பட்டுள்ளனர். முகமூடி அணிந்த 15 தீவிரவாதிகள் ஐ.எஸ். கொடியுடன் அவர்கள் அருகே உள்ளனர். அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம் என்று குர்து தலைவர்க ளுக்கு பிணைக் கைதிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அதைத் தொடர்ந்து மசூதி அருகே வைத்து தீவிரவாதிகள் குர்து இனத்தவர்களில் ஒருவரது தலையை துண்டிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நிகழ்த்தி வரும் இந்த கொடூர கொலைகள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x