Published : 10 Apr 2025 08:12 AM
Last Updated : 10 Apr 2025 08:12 AM
மாஸ்கோ: வரும் மே மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இரண்டாவது உலக போரில் ஜெர்மனியும் அப்போதைய சோவியத் யூனியனும் கடுமையாக மோதிக் கொண்டன. பின்னர் 1945-ம் ஆண்டு சோவியத் யூனியன் தாக்குதலை சமாளிக்க முடியாத ஜெர்மனியின் நாஜி படைகள் சரணடைந்தன. அதன்படி 80-வது ஆண்டு தின விழாவை அடுத்த மாதம் 9-ம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இந்த வெற்றி தின விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ நேற்றுமுன்தினம் தெரிவித்தார். பிரதமர் மோடி பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று ஆண்ட்ரே கூறினார்.
பிரதமர் மோடியும் அதிபர் புதினும் 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது தொலைபேசியில் பேசிக் கொள்கின்றனர். பிரதமர் மோடி கடந்த ஆண்டு ரஷ்ய பயணம் மேற்கொண்டார். அப்போது அதிபர் புதினுடன் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி அதிபர் புதின் இந்த ஆண்டுக்குள் இந்தியா வருகை தருவார் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT