

தாய்லாந்தில் குகையில் சிக்கியுள்ள 8 சிறுவர்களையும், அவர்களது பயிற்சியாளரையும் மீட்க அடுத்தகட்ட மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய கால்பந்து அணியைச் சார்ந்த 12 சிறுவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் பயிற்சியாளர் ஒருவரும் சென்றிருந்தார். அப்போது கனமழை பெய்திட அவர்கள் குகையில் சிக்கிக் கொண்டனர்.
தாம் லுவாங் குகையில் 10 நாட்களுக்கும் மேலாக சிக்கிக் கொண்ட இவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 4 நான்கு சிறுவர்கள் மீட்கப்ப்ட்டனர். இந்த நிலையில் மீதமுள்ளவர்களை மீட்க மீட்புப் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து மீட்புப் பணி குழுவின் தலைவர் நவ்ரவ்சேக் சோட்டனகோர்ன் கூறும்போது, "மிதமுள்ளவர்களை மீட்க அடுத்தகட்ட மீட்புப் பணி நடந்து வருகிறது. குகையில் சிறுவர்களை மீட்கும்போது ஆக்சிஜன் அளவு அங்கு குறைவாக இருப்பதால் அதனை சரி செய்யும் முயற்சியில் மீட்புப் பணி வீரர்கள் இறங்கியுள்ளனர். இதற்கு சில மணி நேரம் எடுக்கும்” என்றார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தாய்லாந்து உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.