சீனாவில் நிலநடுக்கம்: 180 பேர் பலி

சீனாவில் நிலநடுக்கம்: 180 பேர் பலி
Updated on
1 min read

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 180 பேர் உயிரிழந்தனர்; 1,400-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 180 பேரின் நிலை பற்றித் தெரியாததால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சீனாவின் தெற்கு மேற்குப் பகுதியில் யுன்னான் மாகாணம் உள்ளது. இங்கு லுடியான் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு 6.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 180 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் 12,000 வீடுகள் முற்றிலும் இடிந்தன; 30,000 வீடுகள் சேதமடைந்தன.

நிலநடுக்கம் 12 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைவு மையம் தெரிவித்துள்ளது.

நிலஅதிர்வை உணர்ந்ததும் பெரும்பாலான மக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர்.

இருப்பினும் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். இடிந்து விழுந்ததில் பெரும்பாலான கட்டிடங்கள் பழைய கட்டிடங்களாகும்.

அப்பகுதியில் போக்குவரத்து, மின்சாரம், சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. லுடியான் நகரத்திலுள்ள மக்களை தொலைபேசியில் தொடர்பு கொள்வதில் சிரமம் உள்ளதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடிமக்கள் விவகாரங்கள் துறையினர், சம்பவ இடத்துக்கு 2,000 கூடாரங்கள், 3,000 படுக்கைகள், 3,000 கோட்டுகளை அனுப்பி வைத்துள்ளனர்.

லுடியான் நகரம் 2.66 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பகுதியில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் அலகு நிலநடுக்கத்தால் 80 பேர் உயிரிழந்தனர்; 800-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை திபெத்திலுள்ள ஜிகாட்ஸ் பகுதியில் 5.0 ரிக்டர் அலகு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள இப்பகுதி அருணாசலப்பிரதேசத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in